சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் (Chennai Beach railway station, நிலையக் குறியீடு: MSB) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்நிலையம் மெட்ராசு கடற்கரை என்ற பெயரால் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பாரிமுனையில் உள்ள தெற்கு ரயில்வே வலையமைப்பின் ஓர் தொடருந்து நிலையமாக, சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் இயங்குகிறது. சென்னை மாநகரத்திலிருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் விதமாக உருவாக்கப்பட்ட, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்து சென்னை புறநகர் இருப்புவழி என்ற பெயரில் தொடருந்து சேவையை இந்த நிலையம் வழங்குகிறது. மேலும் இந்நிலையம் சென்னை பறக்கும் இரயில் திட்டத்தையும் ஒரு சில பயணிகள் இரயில்களின் புறநகர் சேவைகளுக்கும் சேவை செய்கிறது. அதேவேளையில் பறக்கும் இரயில் திட்டத்தின் வடக்கு முனையமாகவும், இந்நிலையம் செயல்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற அருகில் இருந்ததால் இந்த தொடருந்து நிலையத்துக்கு சென்னை கடற்கரை என பெயரிடப்பட்டது. இது பின்னர் சென்னை துறைமுகத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மெரினா கடற்கரையை முன்னிலைப்படுத்திய பெயர் இதுவல்ல. பறக்கும் இரயில் திட்டத்தில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரைவிளக்கு போன்ற நிலையங்கள் சென்னை மெரீனா கடற்கரைக்கான பயணிகள் சேவையை வழங்குகின்றன. இரயில் நிலையத்தில் 1500 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு திறந்த வெளி வாகன நிறுத்துமிட வசதி உள்ளது.[1] இந்த நிலையம் உயர் நீதிமன்றம் மற்றும் பிராட்வே எனப்படும் பாரிமுனைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையத்திற்கு வெளியே சிறிய கடைகளில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் பர்மா பசார் உள்ளது. பெரும்பாலான அரசாங்க அலுவலகங்கள் மற்றும் சில வங்கிகளின் தலைமையகங்கள் மற்றும் பாரி குழுமத்தின் அலுவலகங்கள் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. சென்னையின் இரயில் வலைப்பின்னலின் பெரும்பகுதிக்கு ஒரு மைய முனையமாக இருப்பது மட்டுமல்லாமல், வடக்கு மற்றும் வடமேற்கு சென்னைக்கு செல்ல வேண்டிய பயணிகளுக்கான முக்கிய பேருந்து போக்குவரத்து மையமாகவும் இந்த நிலையம் விளங்குகிறது. உள்ளூர் பேருந்துகளில் பெரும்பாலானவை நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
சென்னை நகரின் கிழக்கு பகுதியில் சென்னை கடற்கரை இரயில் நிலையம் அமைந்துள்ளது. துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையை இப்பாதை அடைகிறது. வரலாற்று சிறப்பு மிக்க ஜார்ஜ் டவுன் இதன் அருகில் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையம் வடக்கு மற்றும் தெற்கு பாதைகளை ஒன்றிணைக்கும் இடமாகவும் செயல்படுகிறது. சென்னை புறநகர் ரயில்வே வலையமைப்பின், மையப் புள்ளியாக அமைகிறது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, இந்நிலையம் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் இராஜாஜி சாலையும், கிழக்கில் சென்னை துறைமுகம் போன்றவை இவ்வளாகத்திற்கு எல்லையாக உள்ளன. பிரதான நுழைவாயில் இராஜாஜி சாலையில் பொது தபால் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னை துறைமுகத்துடன் ஒரு நடை பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தில் இரண்டு நடை பாலங்கள் உள்ளன. வடக்கு மற்றும் தெற்கு முனைகளில், தலா ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எட்டாவது நடைமேடையின் வழியாக நான்காவது நடை மேடையை இப்பாலங்கள் இணைக்கின்றன. தெற்கு முனையிலுள்ள கால் நடை பாலம் சென்னை துறைமுகம் வரை நீண்டு, துறைமுகத்தை ரயில் நிலையத்துடன் இணைக்கிறது.[2] பின்னர் இராஜாஜி சாலையின் மேற்கு புறத்திலும் நடைபாலம் நீட்டிக்கப்பட்டது. இரயில்வே திட்டத்தின் கீழ் பொது நிதியில் இருந்து பத்து முன்பதிவு செய்யும் இடங்கள் மற்றும் ஒரு பெரிய பார்வையாளர் மண்டபம் கொண்ட புதிய இட ஒதுக்கீடு மையம் போன்றவை 2013 இல் கட்டப்பட்டன.[3]
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 14.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12]