ஸ்ரீ சத்திய சாயி விமான நிலையம் (ஐஏடிஏ: PUT, ஐசிஏஓ: VOPN), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் புட்டபர்த்தியில் நகர மையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய விமான நிலையம் ஆகும். இது ஆன்மிக குரு சத்திய சாயி பாபாவின் பெயரில் அமைந்துள்ளது. இது வர்த்தக நோக்கற்ற தனிப்பட்ட விமானங்களைக் கையாளக் கூடிய வகையில் உள்ளது. இது புட்டபர்த்தியிலுள்ள சத்திய சாயி உயர் மருத்துவ வைத்தியசாலையின் அவசர நோயாளர்களுக்கு உதவும் வகையில் 1990 நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் 1000 மீட்டர் நீளமான ஓடுபாதை எல் அன்ட் டி ஈசிசி நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுப் பின்னர் சற்றுப் பெரிய வானூர்திகளைக் கையாளும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.[1] ஓடுபாதையின் நீளம் 2131 மீட்டர் ஆகவும் அகலம் 45 மீட்டர் ஆகவும் உள்ளது.[2] இது தேசிய நெடுஞ்சாலை 7இலிருந்து 24 கிலோமீட்டர் தூரத்திலும் மாநில நெடுஞ்சாலை 28இலிருந்து 34 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.[2]
2008ஆம் ஆண்டு வரை இவ்விமான நிலையத்திலிருந்து சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் மும்பை சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகியவற்றுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்பட்டன.[3] பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை அடுத்து இவ்விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
பொதுவகத்தில் ஸ்ரீ சத்திய சாயி விமான நிலையம் பற்றிய ஊடகங்கள்