இயங்கா கடற்படை (Fleet in being) என்பது துறைமுகத் தளங்களை விட்டு வெளியேறாமலேயே ஒரு கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் கடற்படைப் பிரிவினைக் குறிக்கிறது. இத்தகு கடற்படைகள் ஒரு கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தால், இவற்றை சமாளிக்க எதிர் தரப்பினர் இன்னொரு கடற்படையை அங்கு அனுப்பும் நிலை உருவாகும். இயங்கா கடற்படைகள் துறைமுகங்களை விட்டு வெளியேறி கடற்பகுதியில் பயணித்தால், எதிர் தரப்புடன் மோதல்கள் நிகழலாம். இதில் வெற்றி என்பது உறுதி கிடையாது. ஆனால் அவ்வாறு உண்மையில் வெளியேறாமல் தளங்களிலேயே தங்கிவிட்டால், அதன் அச்சுறுத்தல் ஒன்றே, சுற்றுப்புற கடற்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த உதவும். இதனை பயன்படுத்திக் கொண்டு எதிர் தரப்பினை எதிர்வினையாற்றச் செய்யலாம்.[1][2][3]
இக்கோட்பாடு 1690ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரித்தானிய அட்மைரல் டோரிங்க்டன் பிரபு இதனை அறிமுகப்படுத்தினார். தனது கடற்படையினை விட பலம் வாய்ந்த பிரெஞ்சு கடற்படையுடன் மோதுவதற்கு பதில், துறைமுகத்தில் இருப்பது சிறந்த உத்தி என்று கண்டறிந்தார். எதிர் தரப்பு துறைமுகத்தை நேரடியாகத் தாக்கத் தயங்கும் ஆனால் வேறு இடங்களுக்கும் செல்ல இயலாது (அப்படி சென்று விட்டால் மீண்டும் துறைமுகத்தை விட்டு வெளியேறி கடலில் ஆதிக்கம் செலுத்தலாம்). துறைமுகத்தில் இருக்கும் கடற்படைக்கு கூடுதல் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இக்கோட்பாடு செயல்பட்டது. ஆனால் வான்படைகளின் வளர்ச்சிக்குப் பின்னர் இக்கூற்று பொய்யானது. துறைமுகத்தில் உள்ள கப்பல்களை வானூர்திகள் எளிதில் தாக்கி அழிக்கும் நிலை உருவானது.